
சென்னை மாகாண அரசிதழ்களை அச்சிட்டு வெளியிடும் பொருட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 10 பணியாளர்களுடன் சிறிய அரசு அச்சகமாக 1831 - ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 17 -ஆம் நாள் துவங்கப்பட்ட எழுதுபொருள் அச்சுத்துறை 192 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சென்னை மாநகராட்சியில் வள்ளலார் நகரில் 5.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் அரசு மைய அச்சகம், சென்னை-01 எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் பிரதான அச்சகமாகும். இவ்வச்சகத்தில் 670 அலுவலர்கள் / அமைச்சுப் பணியாளர்கள் / தொழில் நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வரவு செலவு பிரிவு மற்றும் அதிரகசிய பிரிவில் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களிலும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு மைய அச்சகத்தில் நவீன வசதிகளுடன் 1,25,000 சதுர அடிகள் பரப்பளவில் இரண்டு அடுக்குத் தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் நிருவாகம் மற்றும் தொழில்நுட்பம் பிரிவுகள் செயல்படுகின்றன. மேலும், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.